தென்காசி, மே 5 –
தென்காசி மாவட்டத்தில் ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் நான்கு சட்டமன்ற தொகுதிகளில் திமுகவும் ஒரு சட்டமன்ற தொகுதியில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன. இதில் தென்காசி, ஆலங்குளம், வாசுதேவநல்லூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் நேரடியாக திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக வேட்பாளர் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றுள்ளார். தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதியில் மட்டும் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
குறிப்பாக தென்காசி மாவட்டம் தென்காசி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் மருத்துவர் கலை கதிரவன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் செல்வ மோகன் தாஸ் பாண்டியனை விட 9865 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்காசி தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் மருத்துவர் கலை கதிரவன் தென்காசி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இருந்து வெற்றி பெற்ற சான்றிதழை பெற்றுக் கொண்டார். உடன் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன், முன்னாள் தெற்கு மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் ஆகியோர் இருந்தனர். தென்காசி மாவட்டத்தில் ஒரு தொகுதி கூட தமிழக வெற்றி கழகம் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



