தென்காசி, ஏப்ரல் 20 –
தென்காசி மாவட்டம் தென்காசி சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் மருத்துவர் கலை கதிரவன், தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர் தலைமையில் தென்காசி நகர முக்கிய கடை வீதிகள், சுவாமி சன்னதி பஜார், அம்மன் சன்னதி பஜார், தெற்கு ரதவீதி, வடக்கு ரத வீதிகளில் உள்ள அனைத்து கடைகளிலும் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி திமுக தேர்தல் வாக்குறுதி அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அவருடன் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் உடன் சென்று கடை வீதிகளில் பிரச்சாரம் செய்தனர். இறுதியாக தென்காசி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கலை கதிரவன் தென்காசி அருள்மிகு காசி விசுவநாதர் ஆலய பகுதியில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
பின்னர் அவர் பேசியதாவது: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைத்த உடன் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 திலிருந்து ரூ.2000 ஆக, புதுமைப்பெண் திட்டம் ரூ.1000 திலிருந்து ரூ.1500 ஆக, தமிழ் புதல்வன் திட்டம் ரூ.1000 திருந்து ரூ.1500 ஆக, முதியோர் உதவித்தொகை ரூ.1200 லிருந்து ரூ.2000 ஆக, மாற்றுத்திறனாளி உதவித்தொகை ரூ.1500 லிருந்து ரூ. 2500 ஆக, நெல் கொள்முதல் ரூ.2500 ல் இருந்து ரூ.3500 ஆக, தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் ரூ.1200 திலிருந்து ரூ.2000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று கூறினார்.
மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக ஆட்சியில் நூற்றுக்கணக்கான கோவில்கள் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. அதே போல் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இன்னும் நூற்றுக்கணக்கான கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்படும். தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் இரண்டு தேர்களில் ஒரு தேர் இயங்கவில்லை என்று என்னிடம் கூறினார்கள். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அந்த தேர் சரி செய்யப்பட்டு அடுத்த ஆண்டு தேரோட்டத்தில் இரண்டு தேர்களும் ஓடும் என்று வாக்குறுதி அளித்தார். இந்நிகழ்ச்சியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



