தென்காசி,செப்டம்பர் 27 –
தென்காசி நகராட்சியில் நகர்மன்ற கூட்டம் நகர் மன்ற தலைவர் சாதிர் தலைமையில் துணைத் தலைவர் சுப்பையா முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மொத்தம் உள்ள 33 உறுப்பினர்களில் 28 உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தின் போது 69 தீர்மானங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் அதில் 12-வது தீர்மானத்தில் உள்ள ஒரு தீர்மானத்தை தவிர அனைத்து தீர்மானங்களும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக மன்ற பொருள் குறித்த விவாதத்தின் போது பாஜக உறுப்பினரான சுனிதா என்பவர் எழுந்து தனது வார்டு பகுதியில் சாலை, குடிநீர் வசதி உள்ளிட்ட எந்த விதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை எனக்கூறி நகர்மன்ற கூட்டரங்கில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து மேலும் ஒரு பாஜக உறுப்பினரான சங்கர சுப்பிரமணியன் என்பவர் எழுந்து உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் ஒரு முகாமிற்கு ரூ.2.94 லட்சம் செலவு செய்திருப்பதாக கணக்கு காட்டி இதுவரை உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மட்டும் சுமார் ரூ.30 லட்சம் மோசடி நடந்துள்ளதாகவும் இது தொடர்பாக உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்த நிலையில் தொடர்ந்து தனது வார்டு பகுதியில் 3 மாத காலமாக குடிநீர் விநியோகம் முறையாக கொடுக்கப்படவில்லை எனவும் இது தொடர்பாக பல முறை புகார் கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி நடவடிக்கை எடுக்கும் வரை நான் தோப்புக்கரணம் போடுவேன் எனக்கூறி தோப்புக்கரணம் போட்டவாறு நகர்மன்ற தலைவர் இருக்கை அருகே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இது தொடர்பாக பதிலளித்த அதிகாரிகள் திட்டப்பணிகள் முறையாக நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக எந்த விதமான விசாரணைக்கும் தாங்கள் தயாராக உள்ளதாக கூறிய நிலையில் கூட்டமானது பெரும் பரபரப்பான நிலையில் முடிவடைந்தது.



