தஞ்சாவூர், ஜூலை 14 –
தூய்மை பணியாளர்கள் நலன் காக்கும் மருத்துவ திட்டம் விரைவில் தொடங்கப்படும் என வாரிய தலைவர் ஆறுச்சாமி தகவல். தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தாட்கோ சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்கினார். ச.முரசொலி எம்பி, டி.கே.ஜி. நீலமேகம் எம்எல்ஏ, மாநகராட்சி மேயர்கள் சண். ராமநாதன் (தஞ்சாவூர்), சரவணன் (கும்பகோணம்), துணை மேயர் அஞ்சுகம் பூபதி, தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரிய துணைத் தலைவர் கனிமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி கலந்து கொண்டு பணியின் போது ஒரு கையை இழந்த தூய்மை பணியாளருக்கு இழப்பீடு தொகையாக ரூபாய் 1 லட்சத்திற்கான காசோலையும், ஒரு தூய்மை பணியாளரின் மகளுக்கு ரூபாய் 1,500 கல்வி உதவித் தொகையும், 100 தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அட்டையும் வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: தூய்மை பணியாளர்களின் நலனை காத்திட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியத்தினை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவாக்கினார். ஆனால் அதிமுக ஆட்சி காலத்தில் 10 ஆண்டுகள் ஒரு பைசா கூட ஒதுக்காமல் வாரியம் கிடப்பில் போடப்பட்டது. இப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாரியத்திற்கு உயிர் கொடுத்துள்ளார். தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியம் மீண்டும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் ரூபாய் 10 கோடியை நல வாரியத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
மாநகராட்சி நிதி ஆதாரத்தை கண்டுபிடித்து ரூபாய் 5 கோடி ஒதுக்கீடு செய்தார். ஆண்டுக்கு ரூபாய் 15 கோடி நல வாரியத்திற்கு ஒதுக்கிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மட்டும்தான். தற்போது நல வாரியத்தில் ரூபாய் 45 கோடி இருப்பு இருக்கிறது.
தூய்மை பணியாளர்களுக்காக நலம் காக்கும் மருத்துவத் திட்டம் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. கலைஞர் தூய்மை பணியாளர்கள் விருது வழங்க முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்க இருக்கிறேன். பணம் கொடுக்கிறார்கள் என மலக்குழியில் இறங்கி உயிரை விட வேண்டாம். ரோபோ எந்திரம் மூலம் பணி விரைவில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்கள் குருநாதன், சேகர், வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, தாட்கோ மாவட்ட மேலாளர் தியாகராஜன், துணை மேலாளர் சுமதி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.



