தூத்துக்குடி, செப். 1 –
தூத்துக்குடி மாநகராட்சியின் 17-வது மாநகராட்சி ஆணையராக எஸ். பிரியங்கா இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் அவர் செய்தியாளரிடம் பேசும்போது: “இன்னும் சில வாரங்களில் வடகிழக்கு பருவமழை வர உள்ளதால் வெள்ள தடுப்பு பணிகளை துரிதப்படுத்துவேன். குப்பைதான் ஒரு பிரச்னையாக உள்ளது. அதற்கு முக்கியத்துவம் கொடுப்பேன். இது சம்பந்தமாக மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மக்கள் குறைதீர்க்கும் முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி மாநகராட்சி அழகுபடுத்தப்படும். மாநகராட்சிக்கு என்ன தேவையோ, மக்களுக்கு என்ன தேவையோ அதனை அறிந்து நிறைவேற்றுவேன் என்றார்.
முன்னதாக மாநகராட்சி ஆணையரை உதவி பொறியாளர் சரவணன், நகர் நல அலுவலர், ஆகியோர் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர். மேலும், மாநகராட்சி சுகாதார குழு தலைவர் எஸ். சுரேஷ் குமார் ஆணையருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். தூத்துக்குடி புதிய ஆணையர் பிரியங்கா, ஏற்கனவே திருவாரூரில் கூடுதல் ஆட்சியராகவும், பொள்ளாச்சியில் உதவி ஆட்சியராகவும் இருந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



