திருவெண்ணெய்நல்லூர், ஆக. 18 –
திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுமதுரை கிராமத்தை சேர்ந்த சக்கரவர்த்தி மகன் பாண்டியன் (30), ஆட்டோ ஓட்டுனர். இவர் நேற்று இரவு 7 மணியளவில் பையூர் கிராமத்தை சேர்ந்த 6 பேரை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு திருவெண்ணெய்நல்லூரில் இருந்து தொட்டி குடிசை வழியாக பையூர் நோக்கி நோக்கி சென்றார். அப்போது தொட்டி குடிசை அருகே ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது வனப்பகுதியில் இருந்து குறுக்கே வந்த காட்டுப்பன்றி மீது ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காட்டுப்பன்றி சம்பவ இடத்திலேயே பலியானது.
மேலும் ஆட்டோவில் பயணம் செய்த பையூர் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் அய்யனார் (45), வீரன் மகன் துரை (31), நெப்போலியன் மனைவி குபிதா (27), இளையராஜா மனைவி நவரத்தினம் (32), துரைராஜ் மகன் இளையராஜா (50), துரைராஜ் மகன் பன்னீர்செல்வம் (32) மற்றும் ஆட்டோ ஓட்டுனர் உள்ளிட்ட 7 பேர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



