திருவெண்ணெய்நல்லூர், அக். 07 –
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் ஆர்.ஐ., அலுவலகம் எதிரில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கலீல்கான் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் குப்புசாமி, ஒன்றிய பொருளாளர் அன்பழகன், ஒன்றிய துணைத் தலைவர் அலமேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சௌரிராஜன் கண்டன உரையாற்றினார்.
அப்போது 100 நாள் வேலை கொடுக்காத நாட்களுக்கு இழப்பீடு வழங்குதல், 1999-2000 ஆண்டில் அமைத்தது போல் விவசாய தொழிலாளர் நலவாரியம் அமைத்தல், தீபாவளி, பொங்கல் பண்டிகை நாட்களில் 100 நாள் வேலைய அட்டை வைத்துள்ள குடும்பங்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்குதல், கரும்பு வெட்டும் தொழிலாளர்களுக்கு உயிரிழப்பு ஏற்பட்டால் ஆலை நிர்வாகமே ரூ.10 லட்சம், நிவாரண வழங்குதல், விவசாயிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்குதல், திருவெண்ணெய்நல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனைத்து விஷக்கடிகளுக்கும் மருந்து கையிருப்பு வைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதில் நிர்வாக குழு ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர் செல்வகுமார், மாவட்ட குழு மணிகண்டன், மாவட்ட குழு சேகர், நகர செயலாளர் டி.எஸ். முருகன், மூத்த தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட குழு ஏசுமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியாக சரவணம்பாக்கம் நாராயணன் நன்றி கூறினார்.



