திருவண்ணாமலை, செப். 24 –
திருவண்ணாமலை கீழ்அணைக்கரை புறவழிச்சாலை ஒரு தனியார் திருமண மகாலில் தென்னிந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுக்குழு மற்றும் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடந்தது.
இந்த விழாவுக்கு மாநில தலைவர் முத்தகரம் பழனிச்சாமி தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் சா. சந்தியாகு, மாநில செயலாளர் ப. ஜெயராமன், மாநில பொதுச் செயலாளர் ரா. சுப்பிரமணி, மாநில துணை செயலாளர் ந. முருகன் ஆகியோர் முன்னிலை வகிக்க மாநில துணை தலைவர் அ.எ. கிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆகியோர் தென்னிந்திய விவசாய சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.
இந்த கூட்டத்தில் நந்தன் கால்வாயிலிருந்து கீழ்பென்னாத்தூர் வட்டத்துக்குட்பட்ட கொளத்தூர் அருகே ராட்சத இயந்திரம் மூலம் கீழ்பென்னாத்தூர் கோட்டான் ஏரிக்கு தண்ணீர் கொண்டுசென்று அதிலிருந்து அனைத்து ஏரிகளுக்கும் கால்வாய் மூலமாக பாசன தண்ணீர்கொண்டு செல்ல வேண்டும் துரிஞ்சலாறு அணைக்கட்டு கீரனூர் ஓலையாறு – துரிஞ்சலாறு இணைப்பு சம்பந்தனூர் அணைக்கட்டை விரிவுபடுத்த வேண்டும் தி.மலை மாவட்டத்திலுள்ள கரும்பு பயிரிடும் விவசாயிகளுக்கு கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5ஆயிரம் வழங்க வேண்டும் தெலுங்கானா மாநில விவசாயிகளுக்கு ஒவ்வொரு சாகுபடிக்கும் ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் அரசு வழங்குவதுபோல தமிழகத்திலும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும்
தமிழகத்திலுள்ள விவசாயிகளுக்கு சாமிநாதன்கமிட்டி பரிந்துரையின்படி குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் மாவட்டத்தில் புதியதாக வாசன திரவிய தொழிற்சாலை அமைக்க வேண்டும் அதேபோல மரவள்ளி தொழிற்சாலை ஒன்றும் அமைத்திட வேண்டும் மாவட்டத்தில் சாப்செட்கோ மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பொது விவசாயிகள் பயன்பெறும் வகையில் இலவச மின்சாரம் வழங்கியும் விவசாயிகளுக்கு தொடர் மும்முனை மின்சாரம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 11 தீர்மானங்கள் மாநில பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இதில் தமிழ்நாடு தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே. கம்பன், மாவட்ட அவைத் தலைவர் கோ. கண்ணன், முன்னாள் நகரமன்ற தலைவர் இரா. ஸ்ரீதரன், திமுக மாநகர செயலாளர் ப. கார்த்திவேல்மாறன், மாவட்ட பொருளாளர் எஸ். பன்னீர்செல்வம், தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் கே.வி. ராஜ்குமார், வேளாண் உற்பத்திக்குழு உறுப்பினர்கள் ஜெ. மெய்கண்டன், ஆர். ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் ஆராஞ்சி ஏ.எஸ். ஆறுமுகம், சி. மாரிமுத்து, ஆர். ராஜேந்திரன், அட்மா குழு தலைவர் இரா. சிவக்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வயலூர் சதாசிவம் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள், திமுக முன்னோடி நிர்வாகிகள், விவசாயிகள் சங்க மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில மாவட்ட சட்ட ஆலோசர்கள், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய அமைப்பாளர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் ஏ. புவியரசன் நன்றி கூறினார்.



