தூத்துக்குடி, அக்டோபர் 22 –
தூத்துக்குடி – திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் பொட்டலூரணி கிராமம் அமைந்துள்ளது. இன்று காலை சுமார் எட்டு முப்பது மணி அளவில் 200க்கும் மேற்பட்ட பொட்டலூரணி கிராம மக்கள் திரண்டு தூத்துக்குடி-திருநெல்வேலி, திருநெல்வேலி-தூத்துக்குடி இடை நில்லா பேருந்துகள் உட்பட அனைத்து பேருந்துகளும் பொட்டலூரணி விலக்கில் நின்று செல்ல வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து போக்குவரத்து துறையினரும், காவல்துறையினரும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் கிராம மக்கள் போக்குவரத்து துறையின் மண்டல மேலாளரிடம் மட்டுமே நாங்கள் பேச்சு வார்த்தை நடத்துவோம் எனக் கூறி தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தால் தேசிய நெடுஞ்சாலையின் இரு புறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. முடிவுகள் எட்டப்படாத சூழ்நிலையில் போக்குவரத்தை சீர் செய்ய காவல்துறை அதிகாரிகள் அவர்களை கைது செய்து வாகனத்தில் மூலம் அழைத்து வந்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.



