திருச்செந்தூர், ஜூலை 5 –
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூ.10.57 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதியினை முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடாக திகழும் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு உபயதாரர் நிதி மற்றும் திருக்கோயில் நிதியின் மூலம் பெருந்திட்ட வரைவின்கீழ் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வரிசை முறை, காத்திருப்பு அறை, மருத்துவ மையம், முடிக்காணிக்கை செலுத்தும் இடம், பொருட்கள் பாதுகாப்பு அறை, அன்னதானக்கூடம், பக்தர்கள் தங்கும் விடுதிகள், சுகாதார வளாகம், திருமண மண்டபங்கள், பணியாளர் குடியிருப்பு ஆகிய திருப்பணிகளின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் 28.09.2022 அன்று தொடங்கி வைத்தார்.
அத்திருப்பணிகளில் 33.25 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்ட முடி காணிக்கை மண்டபம், வரிசை வளாகம், சுகாதார வளாகங்கள், கலையரங்கம், நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் நீரேற்று நிலையம் ஆகியவை கடந்த 14.10.2024 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பக்தர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் இன்றைய தினம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூ.10 கோடியே 57 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 4 சொகுசு அறை (Suit Room), 24 குளிர்சாதன வசதிகளுடன் கூடிய அறைகள், 24 சாதாரண அறைகள் என மொத்தம் 52 அறைகளுடன் கூடிய பக்தர்கள் தங்கும் விடுதியினை பக்தர்களின் பயன்பாட்டிற்காக காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் கலந்துகொண்டு பக்தர்களின் பயன்பாட்டிற்காக ரூ.10 கோடியே 57 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதியினை திறந்து வைத்து பக்தர்களின் தேவைகளை அறிந்து அதனை நிறைவேற்றி வரும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு துத்துக்குடி மாவட்ட மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் டாக்டர் சி. பழனி, கூடுதல் ஆணையர் பொ. ஜெயராமன், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் தக்கார் ஆர். அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன், திருச்செந்தூர் நகர்மன்றத் தலைவர் சிவஆனந்தி, திருச்செந்தூர் வட்டாட்சியர் பாலசுந்தரம், திருக்கோயில் பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.