திருச்சி, மார்ச் 23 –
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்பது சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்களை தேர்தல் நடத்தும் அலுவலர் சரவணன் அறிவித்துள்ளார். திருச்சி கிழக்கு, மேற்கு, திருவெறும்பூர், மணப்பாறை, ஸ்ரீரங்கம் தொகுதிகளுக்கு டிவிஎஸ் டோல்கேட் ஜமால் முகமது கல்லூரியிலும், முசிறி, துறையூர், மண்ணச்சநல்லூர், லால்குடி தொகுதிகளுக்கு புலிவலம் ஒயாசிஸ் கல்லூரியிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாக்கு பெட்டிகள் துறையூர் நகராட்சி அலுவலகத்தில் பாதுகாப்பான அறையில் வைக்கப்பட உள்ளன. அந்த அறையில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை திருச்சி மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நிகழ்வில் துணை தேர்தல் அதிகாரிகள் உடன் இருந்தனர்.



