ஈரோடு, செப். 9 –
தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த 14 தொகுதி நிர்வாகிகளுக்கு நியமன சான்றிதழ் வழங்கும் விழா, கொங்கு மண்டல நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் ஈரோட்டில் நடந்தது. கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி சான்றிதழ்கள் வழங்கினார். தலைமை நிலைய செயலாளர் கனல் கண்ணன், மாநில இளைஞர் அணி செயலாளர் பிரம்ம மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிதாக கட்சியில் சேர்ந்தவர்களை கட்சி தலைவர் வேல்முருகன் வரவேற்றார்.
கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பவானி சட்டமன்ற தொகுதி செயலாளர் பி.கே. பழனிச்சாமி, ஈரோடு கிழக்கு தொகுதி செயலாளர் வி.கே. சீனிவாசன் ஆகியோர் செய்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து நிருபர்களிடம் கட்சி தலைவர் வேல் முருகன் கூறியதாவது: ‘தி.மு.க. கூட்டணி வலுவான கூட்டணி, வெற்றிக்கூட்டணி. எங்கள் கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை. எங்கள் கூட்டணிக்கு எதிராக உள்ள அ.தி.மு.க – பா.ஜனதா கூட்டணியில் தான் பல சலசலப்புகள் உள்ளன.
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகியோர் கூட்டணியை விட்டு வெளியேறி விட்டனர். அ.தி.மு.க.வில் மூத்த தலைவராக இருந்த செங்கோட்டையனையும் கட்சியை விட்டு வெளியேற்றி இருக்கிறார்கள். இவ்வாறு எதிர் முகாமில் தான் சலசலப்புகள் உள்ளன. எங்கள் மதசார்பற்ற கூட்டணி வலுவானதாக தேர்தலை எதிர்கொண்டு பயணிக்கிறது’ இவ்வாறு அவர் கூறினார்.



