தருமபுரி, ஏப்ரல் 27 –
தருமபுரி மாவட்டத்தில் கொடை வெயிலின் தாக்கத்தால் வெப்பஅலை ஏற்படும் மதிய நேரத்தில் பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். தருமபுரி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெப்ப அலை உச்சத்தில் இருக்கும் போது வெப்பஅலை ஏற்படுகிறது.
இதனால் இந்த நேரத்தில் பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். தாகம் இல்லாவிட்டாலும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். வீடுகளில் சூரிய ஒளி மறைப்புகள் மற்றும் பிரதிபலிப்பான்களை பயன்படுத்தி காற்றோட்டமாகவும் குளிர்ச்சியாகவும் வைத்திருக்க வேண்டும். ஓ ஆர் எஸ் குடிநீர் மற்றும் அத்தியாவாசிய மருந்துகள் வீட்டில் வைத்திருக்க வேண்டும். கோடை காலத்தில் வெளிர் நிறத்தில் தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.
வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், சிறு குழந்தைகள் மற்றும் நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் வெயில் அதிகம் உள்ள நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். இலைகள் குப்பை அல்லது விவசாயக் கழிவுகள் எரிப்பதை தவிர்த்து வீடுகள், மொட்டை மாடிகளில் செடிகள், மரங்கள் வளர்த்து பசுமை சூழல் நிறைந்த இடமாக பராமரிக்க வேண்டும். வெயில் அதிகம் உள்ள நேரத்தில் நீர், மோர், இளநீர், எலுமிச்சைச்சாறு ஆகியவற்றை குடிக்க வேண்டும். வெயிலில் செல்லும் போது தொப்பி, குடை ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும்.
கோடைகாலத்தில் நீண்ட நேரம் நடை பயிற்சி சூரிய ஒளியின் உடற்பயிற்சி ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். எளிதில் ஜீரணிக்ககூடிய உணவுகளை சாப்பிட வேண்டும். மது உள்பட நிரிழப்பு ஏற்படுத்தும் பானங்களை தவிர்க்க வேண்டும். இவ்வாறு ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.



