நாகர்கோவில், நவ. 22 –
கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி குமரி மாவட்ட மீனவர் கூட்டமைப்புகள் சார்பில் உலக மீனவர் நாளை முன்னிட்டு, குளச்சல் மீன்பிடித் துறைமுக மைதானத்தில் மீனவர் தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தனராக திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
விழாவில் பேசிய கனிமொழி கூறியதாவது: கடலை ஆண்ட பரம்பரை என்று பெருமையோடு நம்மை சொல்லிக் கொள்ளக்கூடிய அந்த பரம்பரையைச் சார்ந்தவர்கள் தான் தமிழர்கள். நம்முடைய மூதாதையர்கள் காலம் தொட்டு, நம்முடைய மாமன்னர்கள் காலம் தொட்டு, கடல் வழியாக பல நாடுகளுக்குச் சென்று வணிகம் செய்தவர்கள் நாம். அந்தப் பெருமையுடனே தான் மீனவர் தினத்தை நாம் கொண்டாடுகிறோம்.
மீனவர்கள் கோரிக்கை வைக்கும்முன்னரே அவர்கள் நலனுக்கான திட்டங்களை முதல்வர் திட்டமிட்டு செய்து வருகிறார். மீனவர்களுக்காக அரசு மாநாடு நடத்திய பெருமையும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இருக்கிறது. மீனவ சமூகத்தை சார்ந்த பிள்ளைகள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., படிக்கவேண்டும் என்பதற்காக திட்டங்களை தீட்டி, எல்லாரும் படிக்க கூடிய வாய்ப்புகளை பெற வேண்டும் என்று நினைக்கக்கூடிய ஆட்சி திமுக.
இப்போது மத்திய அரசு எஸ்.ஐ.ஆர்-யை கொண்டு வந்து, அதற்கு போதிய அவகாசம் இல்லை. 45 நாள் முதல் 60 நாட்களில் உங்களுக்கு வாக்குரிமை இருக்கிறதா இல்லையா என்பதை அதிகாரிகள் முடிவு செய்வார்கள். பீகாரில் நடைபெற்ற தேர்தலில் சிறுபான்மை மக்களின் வாக்குகள் பறிக்கப்பட்டது, சிந்திக்கக்கூடிய பெண்களின் வாக்குகள் பறிக்கப்பட்டது, தலித் மக்களின் வாக்குகள் பறிக்கப்பட்டது.
பாஜகவிற்கு தேர்தல் நேரத்தில் மட்டும் தான் தமிழ்நாடு கண்ணுக்கு தெரியும், மற்ற நேரங்களில் மறந்துவிடுவார்கள். தேர்தல் நேரத்தில் கூட நம்முடைய கோரிக்கைகளை நிராகரிப்பார்கள். மதுரை மற்றும் கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் இல்லை என்பார்கள். குளச்சலில் துறைமுகம் வேண்டும் என்று மீனவ மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள், அதற்கும் பணம் இல்லை. மழை–புழலுக்கான நிவாரணம் கேட்டல், அதற்கும் பணம் இல்லை என்கிறார்கள்.
பாஜக நமது திட்டங்களை நிராகரித்து, அதே நேரத்தில் தமிழ்நாட்டிற்கு வந்து, வரும் தேர்தலில் வாக்குகள் வேண்டும் என்று கேட்க்கிறார்கள். இப்படிப்பட்ட நாடகங்களுக்கு நடுவே மக்களின் சமூகநீதியையும் உரிமைகளையும் காக்கும் பொறுப்பு நமக்கே உள்ளது. திமுக தலைமையிலான கூட்டணி எப்போதும் மக்களோடு நின்று பயணிக்கும் என்ற உறுதியை எந்த மீனவர் தினத்தில் உறுதியளிக்கிறேன் என்று பேசினார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், பால்வளத்துறை அமைச்சருமான மனோ தங்கராஜ், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான ரெ.மகேஷ், தமிழ்நாடு அரசு மாநில உணவு ஆணையத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான சுரேஷ்ராஜன், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார், விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பர்ட், திமுக மாநில மீனவர் அணி அமைப்பாளர் ஏ.ஜே.ஸ்டாலின், சத்யபாமா பல்கலைகழக நிர்வாக இயக்குநர் Dr.மரியஜீனா ஜான்சன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



