தருமபுரி, ஜூன் 16 –
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் தாலுகா கம்பைநல்லூர் அருகே பன்னிகுளம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் 118 பயனாளிகளுக்கு ரூ. 29.52 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். வருவாய் துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, வேளாண்மை துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்கினை ஆட்சியர் பார்வையிட்டார். தொடர்ந்து ஆட்சியர் கூறுகையில் மக்கள் தொடர்பு முகாம்களில் பொதுமக்கள் தங்களுடைய வாழ்வாதாரம் மேம்பட தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் பற்றி அறிந்து விண்ணப்பித்து பயன் பெறலாம் என்றார். முகாமில் அனைத்துக் கோரிக்கை மனுக்கள் மீது உரிய முறையில் கள ஆய்வு செய்யப்பட்டு தகுதியான பயனாளிகள் அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் வழங்க வேண்டும் என அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார். இந்த முகாமில் அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார், ஆர்டிஓ காயத்ரி, தனித்துணை ஆட்சியர் சுப்பிரமணியன், டிஎஸ்ஓ செம்மலை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சையது முகைதீன் இப்ராகிம், பழங்குடியினர் நலத்திட்ட அலுவலர் கண்ணன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் தேன்மொழி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி, காரிமங்கலம் தாசில்தார் மனோகரன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.