தருமபுரி, செப்டம்பர் 03 –
தருமபுரியில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்களின் 7 அம்ச கோரிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தி 3-ம் தேதி மற்றும் 4-ம் தேதி ஆகிய இரண்டு தினங்கள் மாநில முழுவதும் சுமார் 14 ஆயிரம் வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்ற 48 மணி நேர தொடர் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. இதையொட்டி தருமபுரி மாவட்டத்திலும் வருவாய்த்துறை அலுவலர்கள் இன்று காலை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையொட்டி தருமபுரி புதிய ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தருமபுரி மாவட்ட தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் துரைவேல் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சிவன் முன்னிலை வகித்தார். வருவாய்த்துறை அலுவலரின் கோரிக்கைகளை வலியுறுத்தி ராஜா மற்றும் தனபால் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். இறுதியாக மாவட்ட பொருளாளர் பகவதி நன்றி கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடன் நிரப்பிட அரசாணை வெளியிட வேண்டும். மேலும் மூன்றாண்டுக்கு உட்பட்ட 546 அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடன் நிரப்பிட வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் குறுகிய கால அவகாசத்தில் அதிகமான முகாம்கள் நடத்துவதை குறைத்து.வாரத்திற்கு இரண்டு முகாம்கள் மட்டுமே நடத்த வேண்டும். மேலும் இத்திட்டப்பணிகளை மேற்கொள்ள உரிய கால அவகாசம், கூடுதலான தன்னார்வலர்கள், நிதி ஒதுக்கீடு மற்றும் அடிப்படை கட்டமைபுப வசதிகள் ஆகியவற்றை வழங்கிட வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் மேலாண்மைப் பணிக்கென சிறப்பு பணியிடங்கள் மற்றும் பேரிடர் மேலாண்மைப்பிரிவில் 31.03.2023 முதல் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை மீண்டும் வழங்கிட வேண்டும். சான்றிதழ் வழங்கும் பணிகள் மற்றும் உங்களுடன் ஸ்டாலின்உள்ளிட்ட அரசு சிறப்புத்திட்டப் பணிகளை மேற்கொள்ள அனைத்து வட்டங்களிலும், புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை உடனடியாக ஏற்படுத்திட வேண்டும்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் & தனி ஊதியம் வழங்கிட வேண்டும். அரசுத்துறைகளில் கருணை அடிப்படை பண நியமனத்திற்கான உச்சவரம்பு 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதை இரத்து செய்து, மீண்டும் 25 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். இளநிலை உதவியாளர் / தட்டச்சர் ஆகியோருக்கிடையே ஒருங்கிணைந்த முதுநிலை நிர்ணயம் செய்வதில் ஏற்படுத்தப்பட்டள்ள குளறுபடிகளை சரி செய்திட மனிதவள மேலாண்மைத்துறை மூலமாக உரிய அரசாணையை உடன் வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டன.
இந்த போராட்டத்தில் ஏராளமான வருவாய் துறை அலுவலர்கள் அலுவலக பணியை புறக்கணித்து ஈடுபட்டனர். இந்த வேலை நிறுத்தத்தின் காரணமாக மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர், கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், அலுவலர்கள் இன்றி காணப்பட்டது.



