திருப்பூர், ஜுலை 5 –
தமிழக அரசு நொய்யல் நதியை காப்பாற்ற தவறும் பட்சத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என விவசாய அமைப்புகள் பகிரங்கமாக அறிவிப்பு. நொய்யல் ஆற்றில் மலை போல் குவிந்து கிடக்கும் நெகிழிகுப்பைகள், கட்டிட கழிவுகள், சாய சலவை பட்டறை கழிவுகள், ஆகாய தாமரைகள் அகற்றி சுத்தம் செய்து நொய்யல் நதியை மீட்டு தர வேண்டும் என தமிழக நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் 13-ம் தேதி முதல் கால வரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் துவங்கி திருப்பூர், ஈரோடு என கரூர் மாவட்டம் வரை செல்லும் நொய்யல் ஆற்றில் அதிக அளவிலான பிளாஸ்டிக் குப்பை, கழிவு நீர் மற்றும் கோழி இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் கட்டிடக்கழிவுகள் நொய்யல் ஆற்றின் அருகே சென்றாலே கடுமையான துர்நாற்றம் வீசுவதாகவும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதால்
அதன் அருகில் வசிக்கக்கூடிய மக்களுக்கு புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நகரின் மத்தியில் நொய்யல் ஆறு சென்று வரும் நிலையில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர் கூட மாசுபட்டு உள்ளதாகவும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் நொய்யல் ஆற்றில் குப்பைகள் மற்றும் கழிவு நீர் கலக்கப்படுவதை தடை செய்து நொய்யல் ஆற்றை முழுமையாக சுத்தம் செய்து மீட்டுக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூர் மாவட்டம் மங்கலம் நால் ரோடு பகுதியில் தமிழக நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர்கள், விவசாய அமைப்புகள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் வருகிற 13-ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
தமிழக அரசு நொய்யல் நதியை பாதுகாக்க தவறும் பட்சத்தில் வரும் தேர்தலில் இது எதிரொலிக்கும் என விவசாய அமைப்புகள் பகிரங்கமாக அறிவித்துள்ளனர். ஏற்கனவே நாளை காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது அனைத்து அமைப்புகளும் இணைந்து வருகிற 13-ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவங்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.