பல்லடம், மே. 12-
திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பல்லடம், திருப்பூர், காங்கேயம், அவிநாசி பகுதிகளை சேர்ந்த 686 தனியார் பள்ளி வாகனங்களுக்கு தகுதி ஆய்வு மாதப்பூர் முத்துக்குமாரசாமி கோவில் எதிரே உள்ள மைதானத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு திருப்பூர் சப் கலெக்டர் சௌமியா தலைமை தாங்கினார், திருப்பூர் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அதிகாரி ஆனந்த் வரவேற்றார். இதில் 686 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் 514 வாகனங்கள் தகுதி ஆய்வில் தேர்ச்சி பெற்றன 172 வாகனங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டது. அந்த வாகனங்களில் உள்ள குறைகளை நீக்கி மறு ஆய்வுக்கு கொண்டு வர அறிவுரை படுத்தப்பட்டது.
ஆய்வில் மாவட்ட கல்வி அலுவலர் ஆனந்தி (தனியார் பள்ளிகள்) , மோட்டார் வாகன ஆய்வாளர்கள் நிர்மலா தேவி, வேல்மணி, பாஸ்கர், ஈஸ்வரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின், அப்பாதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



