தஞ்சாவூர், ஜூன் 15 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் நுகர்வோர் பொருள் வாலிபக் கழகத்தின் சார்பில் பல்வேறு பணிகளை உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன், வேளாண் துறை அமைச்சர் வினோத் ரவி மாவட்ட கலெக்டர் ரேவதி, விஜய் சரவணன் எம்எல்ஏ ஆகியோர் ஆய்வு செய்தனர்.
தஞ்சாவூர் அடுத்துள்ள அம்மன் பேட்டை நவீன அரிசி ஆலை, நீலகிரி தெற்கு தோட்டத்தில் உள்ள பொது விநியோகத்திட்ட சேமிப்பு கிடங்கு, தஞ்சாவூர் கூட்டுறவு காலணியில் உள்ள பண்பொருள் அங்காடி ஆகியவற்றில் அமைச்சர் வெங்கட்ரவணன் ஆய்வு செய்தார். மேலும் பிள்ளையார்பட்டியில் உள்ள சேமிப்பு கிடங்கு, மருங்குளம் நெல் கொள்முதல் நிலையம், நடுவூரில் கட்டப்படும் சேமிப்புக் கிடங்கு ஆகியவற்றையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தஞ்சாவூரில் ஆய்வு மேற்கொண்ட உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த சில நாட்களாக டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்து வருகின்றேன். இதில் சேமிப்பு கிடங்குகளில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 3.50 லட்சம் டன் நெல் மூட்டைகள், மயிலாடுதுறையில் 1.90 லட்சம் டன், நாகையில் 1.70 டன் நெல் மூட்டைகள் இருப்பில் உள்ளன. கடந்த கால ஆட்சியில் தவறான நிர்வாகத்தால் நெல் மூட்டைகள் தேங்கியுள்ளது. இது குறித்து ஒரிரு நாட்களில் அனைத்து மாவட்டங்களிலும் அறிக்கை பெறப்பட்டு, இந்த நெல் மூட்டைகள் அரவை செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த ஆட்சி காலத்தில் ரூபாய் 40 விவசாயிகளிடம் வாங்கி உள்ளனர் ஏதாவது ஒரு சூழ்நிலைக்காக அந்த பணம் வாங்கப்பட்டு வந்துள்ளது. ஊழியர்கள் அல்லாத நபர்கள் தான் ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஏற்ப ரூபாய் 40, ரூபாய் 50, ரூபாய் 60 என வாங்கி வருகிறார்கள். அந்த ஊழல் இனி எந்த சூழலிலும் நடக்காது. தவெக ஆட்சிக்கு வந்த பிறகு ஊழல் தடுக்கப்பட்டுள்ளது. குறுவை சாகுபடியில் விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தமிழக முதல்வர் முதலமைச்சர் குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவித்துள்ளார்.
கடந்த ஆட்சி காலத்தில் நெல் மூட்டைகளை இயக்கம் செய்ய 5 பேருக்கு மட்டும் தான் டிரான்ஸ்போர்ட் தொடர்பான ஒப்பந்தம் கொடுத்துள்ளனர். அந்த ஒப்பந்தம் வருகிற 30ம் தேதி உடன் முடியும். புதிய ஒப்பந்தம் வழங்கும் முன்பு 5 பேருக்கு மட்டுமா அல்லது 39 மாவட்டங்களுக்கும் ஒப்பந்தத்தை மாவட்ட அளவில் பிரித்து வழங்குவதாக என முடிவு செய்ய உள்ளோம்.
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆய்வுக்கு சென்று வருகின்றேன். விவசாயிகள் போராட்டம் கண்ணுக்கு தெரிந்த அளவு இல்லை .இந்த ஆட்சியில் போராட்டம் கிடையாது. தமிழகத்தில் இந்த கொள்முதல் பருவத்தில் சுமார் 65 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் நுகர்பொருள் வாணிப கழகம் முதுநிலை மண்டல மேலாளர் செல்வம், வருவாய் கோட்டாட்சியர் நித்யா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக செயற்பொறியாளர் முருகன், தரகட்டுப்பாட்டு அலுவலர் சக்தி, துணை மேலாளர்கள் இளங்கோவன், வெற்றிச் செல்வன், வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) சாருமதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சாமுவேல் மற்றும் பலர் உடன் இருந்தனர்.



