தஞ்சாவூர், ஜூலை 30 –
தஞ்சாவூர் டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என திருவையாற்றில் துரை சந்திரசேகரன் எம்எல்ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாறு நகரதிமுக சார்பில் அனைத்து விவசாயிகளின் விவசாய பயிர் கடன்களை ரத்து செய்யாததை கண்டித்தும் விவசாயிகளுக்கு குறுவை சாகுபடிக்கு பயிர் கடன் வழங்காத த.வெ.க அரசை கண்டித்தும், திருவையாறு கிராம கூட்டுறவு வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு திமுக மத்திய மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன் எம்எல்ஏ தலைமை தாங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது: தற்போதைய தமிழக முதலமைச்சர் விஜய் தேர்தலுக்கு முன்பு பயிர் கடனை முழுவதும் முழுமையாக ரத்து செய்வேன் என்றார். ஆட்சிக்கு வந்த பிறகு சொன்னதை செய்யவில்லை. ஒரு வீட்டுக்கு ஒருத்தருக்கு தான் கடன் தள்ளுபடி அரசாங்க வேலையில் இருந்தாலோ அல்லது வங்கி ஊழியராக இருந்தாலோ அல்லது விவசாயியாக இருந்தாலும் நிச்சயமாக அந்த கடனை தள்ளுபடி செய்ய முடியாது என்று சொல்கின்ற தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறோம். பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம். தொடர்ந்து வறட்சி நிலவி வருகிறது. சம்பா சாகுபடியும் இருக்காது. எனவே காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்.
ஏரி, குளங்கள் எல்லாம் தூர்வாரி ஆழப்படுத்துகின்ற பணிகளை விவசாய தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும். திமுக சார்பில் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கிறோம். தஞ்சையில் மிகப்பெரிய அளவில் நம்முடைய சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்கின்ற ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் விவசாயிகள் சார்பாக நிச்சயமாக நடைபெறும். அந்த ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் சிவசங்கரன், அரசாபகரன், கவுதமன், நகர சபை தலைவர் கஸ்தூரி நாகராஜன், துணைத்தலைவர் நாகராஜன், மேல திருப்பந்துருத்தி போரூர் செயலாளர் அகமது மைதீன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



