சேலம், ஆக. 3 –
சேலம் மாவட்டத்தில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடத்திற்கு சென்று பொது விநியோக திட்ட பொருட்களை விநியோகம் செய்ய “இல்லம் சென்று பொது விநியோகத் திட்ட பொருட்கள் விநியோகிக்கும் திட்டம்” சேலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் 1,777 நியாய விலை கடைகளில் பதிவாகியுள்ள 1,07,953 குடும்ப அட்டைகளுக்கு அவரவர் இல்லங்களுக்கு சென்று பொது விநியோகத் திட்ட பொருட்களை விநியோகம் செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதனை ஆகஸ்ட் மாதம் 4.8.2026, 5.8.2026 மற்றும் 6.8.2026 ஆகிய நாட்களில் விநியோகம் செய்திட உத்தரவிடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் இல்லம் தேடி குடிமைப் பொருட்கள் மூன்று நாட்களும் விநியோகம் செய்யப்பட உள்ளது. இந்த மூன்று தினங்களில் பயனாளிகள் குடிமைப் பொருட்களை அவரவர் இல்லங்களில் பெற்றுக்கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் இல்லம் சென்று பொது விநியோகத் திட்ட பொருட்களை விநியோகம் செய்யும் திட்டம் மூலம் பயன் பெறும் பயனாளிகள் தங்களுடைய தொலைபேசி எண், மாற்றுத்திறனாளி குறித்த விபரம், குடும்ப அட்டையில் பதிவு செய்தல் மற்றும் முகவரி மாற்றம் உட்பட இந்தத் திட்டம் தொடர்பான கோரிக்கைகள் ஏதும் இருப்பின் சம்பந்தப்பட்ட குடிமை பொருள் வட்டாட்சியர்/வட்ட வழங்கல் அலுவலரை நேரில் அணுகி தீர்வு பெற்றுக் கொள்ளுமாறு சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் தெரிவித்தார்.


