கிராமப்புற மக்களின் போக்குவரத்து வசதி மேம்பாடு
சேலம், செப். 1:
தமிழகத்தில் எந்தவொரு கிராமத்திலும் போக்குவரத்து வசதி இல்லாமல் பொதுமக்கள் சிரமப்படக் கூடாது என்ற நோக்கில், பல்வேறு பகுதிகளுக்கு நகரப் பேருந்து வழித்தடங்களை நீட்டிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில் சேலம் மாவட்டத்தில் பொதுமக்கள், மாணவர்கள், பெண்கள் மற்றும் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் பல பேருந்து வழித்தடங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, ஆத்தூரில் இருந்து தலைவாசல், புளியங்குறிச்சி வழியாக அய்யனார்பாளையம் செல்லும் பேருந்து, புளியங்குறிச்சியில் இருந்து இந்திரா நகர் பகுதிக்குள் சென்று திரும்பும் வகையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆத்தூரில் இருந்து வீரகனூர், வெள்ளையூர் பிரிவு சாலை, கைகளத்தூர் வழியாக லப்பைக்குடிகாடு செல்லும் பேருந்து, வெள்ளையூர் கிராமத்திற்குள் சென்று திரும்பும் வகையில் வழித்தடம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆத்தூரில் இருந்து புத்திரகவுண்டம்பாளையம், களரம்பட்டி, ஆரியபாளையம் வழியாக கோபாலபுரம் செல்லும் பேருந்து, கோபாலபுரத்தில் இருந்து மதுரூட் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆத்தூரில் இருந்து திம்மநாயக்கன்பட்டி வழியாக மங்களாபுரம் செல்லும் பேருந்து, மங்களாபுரத்தில் இருந்து வேப்பிலைப்பட்டி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வாழப்பாடி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆத்தூரில் இருந்து அக்கிசெட்டிபாளையம், ஆரியபாளையம் வழியாக வாழப்பாடி செல்லும் நகரப் பேருந்து, அக்கிசெட்டிபாளையத்தில் இருந்து சொக்கநாதபுரம் கிராமம் வரை சென்று திரும்பும் வகையில் வழித்தடம் நீட்டிக்கப்பட்டது.
இந்த புதிய வழித்தடங்களை போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தொடங்கி வைத்தார். இதன் மூலம் கிராமப்புற மக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பெண்கள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் அன்றாட பயணங்களில் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



