சேலம், ஆக. 24:
சேலம் மாவட்டம் நங்கவள்ளி கைலாஷ் மகளிர் கல்லூரியில் இந்த ஆண்டின் முதல் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் 185 முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, பல்வேறு கல்வித் தகுதிகளின் அடிப்படையில் பணியாளர்களைத் தேர்வு செய்தன.
எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல், நர்சிங் உள்ளிட்ட கல்வித் தகுதி கொண்ட இளைஞர்கள் முகாமில் பங்கேற்றனர். இதில் 1,267 ஆண்கள், 2,889 பெண்கள், 75 மாற்றுத்திறனாளிகள் என 4,231 பேர் கலந்து கொண்டனர்.
முகாமின் மூலம் 545 ஆண்கள், 892 பெண்கள், 20 மாற்றுத்திறனாளிகள் என 1,457 பேர் பல்வேறு நிறுவனங்களில் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணைகளை பெற்றனர். மேலும், 484 பேர் முதல் கட்டத் தேர்வில் தேர்ச்சி பெற்று இரண்டாம் கட்டத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
மேலும், சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் TNPSC, TNUSRB, MRB, கூட்டுறவு உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 2,500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பயிற்சி பெற்றதில் 563 பேர் தேர்ச்சி பெற்று அரசு பணிகளில் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை பெற விரும்பும் இளைஞர்கள், வேலைவாய்ப்பு முகாம்கள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் கேட்டுக்கொண்டார்.



