தஞ்சாவூர், பிப்ரவரி 23 –
அடக்குமுறை வடிவங்கள் மாறி வரும் நிலையில், சூழ்ச்சிகளை வீழ்த்துவதற்கு பொரியார் தேவைப்படுகிறார் என்றார் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும் மக்களவை உறுப்பினருமான ஆர். இராசா.
தஞ்சாவூர் திலகர் திடலில் நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழக மாநில மாநாட்டில் அவர் மேலும் பேசியதாவது: நம் கவனத்தை திசை திருப்புவதற்காக பெரியார் ஒன்றும் செய்யவில்லை எனக் கூறி வருகின்றனர். பெரியாரை யாரும் இழிவு படுத்த முடியாது. சுருக்கி விட முடியாது. இந்த மண்ணில் இந்துத்துவாதிகளால் கட்டத்திற்குள் அடக்க முடியாத ஒரு நெருப்பு பெரியார் தான். அவருடைய தத்துவம் நூறு ஆண்டுகளைக் கடந்தும் வாழ்கிறது
இப்போதுள்ள இளைஞர்களுக்கு பழைய வரலாறு தெரியவில்லை. அதை படிக்கவும் இல்லை.
இப்போது ஜாதி இல்லை, தமிழ் மொழிக்கு ஆபத்தில்லை என கூறுகின்றனர். ஆனால், இப்போது வடிவங்கள் மாறி இருப்பதை இளைஞர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். திராவிடர் நாடு பிரிவினை கேட்ட பெரியார். தமிழ்நாடு தமிழருக்கே சொந்தம் எனக் கூறினார். அந்த முழக்கம் இப்போது மாநில சுயாட்சியாக மாறி இருக்கிறது. ஆனால் நாடாளுமன்றத்தில் கூட திமுக பிரிவினை பேசுகிறது எனக் கூறுகின்றனர்.
நீலகிரி தொகுதிக்கு வந்த பாஜக முன்னாள் தலைவர் நட்டா, நாங்கள் எவ்வளவோ செய்து பார்க்கிறோம் தமிழ்நாடுதனியாகவே இருக்கிறது என பேசினார். இதுவரை தமிழ் நாட்டை நாங்கள் பிரிப்பதாக கூறியவர்கள், இப்போது அவர்களே தமிழ்நாடு தனியாக இருக்கிறது என கூறுகின்றனர்.
பெரியாரின் தத்துவத்தை திமுக தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறது. அதற்கு வற்றாத ஜீவ ஊற்றாக தாய் கழகம் இன்னும் எங்களை இயக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் அப்போது இருந்த அடக்குமுறை வடிவங்கள் இப்போது வேறு, வேறு முறையில் வருகிறது. அந்த சூழ்ச்சிகளை எல்லாம் வீழ்த்துவதற்கு பெரியார் இன்றைக்கும் தேவைப்படுகிறார். எந்த வடிவத்தில் அடக்குமுறை இருக்கிறதோ, அந்த வடிவத்துக்கெல்லாம் பெரியார் தேவைப்படுவார் என்றார் இராசா.
மாநாட்டில் நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். 2026 சட்டசபை தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் மகத்தான வெற்றி பெற எல்லா வகையிலும் திராவிட கழகம் பாடுபடும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நிறைவு உரையாற்றினார்
மாநாட்டிற்கு திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் செந்தூர பாண்டியன் தலைமை வகித்தார். தஞ்சாவூர் மக்களவை உறுப்பினர் முரசொலி, திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் எஸ்.எஸ். பழனி மாணிக்கம், சட்டப் பேரவை உறுப்பினர் துரை சந்திர சேகரன், முன்னாள் அமைச்சர் ஆர். வைத்திலிங்கம், மேயர் சண். ராம நாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



