சுசீந்திரம், ஏப். 16 –
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இங்கு வருடம் தோறும் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டு தெப்பத் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை மஞ்சள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கோவிலை சுற்றியுள்ள கிராம பெரியவர்களை அழைத்து தெப்ப திருவிழாவை நல்ல முறையில் நடத்தி தருவதற்காக வெற்றிலை, பாக்கு, மஞ்சள், நிகழ்ச்சி நிரல் ஆகியவற்றை பெரியோரிடம் கொடுத்து கிராம மக்களை அழைத்து வருவதற்காக நடைபெறும் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி மன்னர் ஆட்சிக்கு காலத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று காலை சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் சுற்று வட்டார கிராம பெரியவர்களை அழைத்து மஞ்சள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து 18 ஆம் தேதி காலை மேளதாளங்கள் முழங்க தெப்பத் திருவிழாவிற்காக கொடிமர பூஜைகள் செய்து கொடியேற்று நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து காலை, மாலை வேளைகளில் வாகன பவனியும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. 26 ஆம் தேதி காலை எட்டு முப்பது மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் தேரில் விநாயகரும் சப்பரதேரில் சுவாமியும் அம்பாள் தேரில் அம்பாளையும் அமரச் செய்து ரத வீதியை ஒரு முறை வலம் வரும் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அதன் மறுநாள் 27 ஆம் தேதி இரவு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி அம்பாள் பெருமாள் ஆகியோரை அமர செய்து பக்தர்கள் தெப்பக்குளத்தில் தெப்பத்தை மூன்று முறை சுற்றி வலம் வரும் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவில் உள்ளூர் மட்டுமன்றி வெளியூர் பக்தர்களும் பெருமளவு கலந்து கொள்வார்கள். விழா ஏற்பாடுகளை கோவில்களின் இணை ஆணையர் ஜான்சி ராணி, கோவில்மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன், தாணுமாலய சுவாமி பக்தர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.



