கன்னியாகுமரி, ஏப். 13 –
கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டத்தில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த விசைப்படகுகள் அனைத்தும் தினமும் அதிகாலை 5 மணிக்கு கடலுக்கு மீன் பிடிக்க சென்றுவிட்டு இரவு 9 மணிக்கு கரைக்கு திரும்புவது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது. இந்த வெயில் தாக்கத்தின் காரணமாக கடலில் மீன்வளம் குறைந்த வண்ணமாக உள்ளன. இந்த வெயிலுக்கு கடல் நீரின் மேல்பகுதி கடுமையான சூடாக இருப்பதால் மீன்கள் மேலே வராமல் அடியிலேயே தங்கி விடுகின்றன. இதனால் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் மீன்கள் அதிக அளவு கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்து வெறும் கையுடன் திரும்புகிறார்கள். மீன் பிடிக்க செல்லும் விசைப்படகுகளின் டீசல் செலவுக்கு கூட மீன்கள் கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் மீனவர்கள் பெரும் நஷ்டத்துக்கு ஆளாகி உள்ளனர். இதற்கிடையில் மீன்பிடி தடைக்காலம் நாளை 15-ந்தேதி தொடங்குகிறது. இந்த மீன்பிடி தடைகாலம் ஜூன் மாதம் 15-ந் தேதி வரை 61 நாட்கள் அமலில் இருக்கிறது. இந்தநிலையில் இப்போதே மீன்வளம் குறைந்து விட்டதால் விசைப்படகுக்கு கட்டுபடியான விலையில் மீன்கள் கிடைக்கவில்லை.
இந்த காரணத்தினால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வரும் விசைப்படகுகள் இன்று 13-ம் தேதி முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் இந்த விசைப்படகுகள் அனைத்தும் கரையிலேயே நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் மீன்வரத்து இன்றி களை இழந்து வெறிச்சோடி காணப்படுகிறது.



