திருவள்ளூர், செப்.03.
திருவள்ளூர் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ‘சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை’ பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. காவல் உதவி ஆய்வாளர் சுகந்தி தலைமையில் காவலர்கள் சபீதா, ஆர்த்தி மற்றும் ஓட்டுநர் மணிவண்ணன் ஆகியோர் இரண்டு சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் இரவு 12 மணி வரையிலும் பாதுகாப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பள்ளிகள், கல்லூரிகள், துணிக்கடைகள், நகைக்கடைகள், ஆலைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் சென்று பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பெண்களுக்கு எதிரான குற்றங்கள், இணையவழி மோசடிகள் மற்றும் சமூக வலைதளங்களை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. அவசர காலங்களில் 1091 எண்ணை தொடர்புகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, திருவள்ளூர் மாவட்டத்தில் குழந்தைகள் யாசகம் கேட்கும் நிலையைத் தடுக்கும் வகையில் மாவட்ட தடுப்புப்படை குழுவினர் ஆவடி, அம்பத்தூர், பொன்னேரி மற்றும் செங்குன்றம் பகுதிகளில் பேருந்து நிலையங்கள் மற்றும் போக்குவரத்து சிக்னல்களில் கூட்டாய்வு மேற்கொண்டனர். இதில் செங்குன்றம் பகுதியில் யாசகம் கேட்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 2 குழந்தைகள் மற்றும் ஒரு சிறார் மீட்கப்பட்டு குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மீட்கப்பட்ட குழந்தைகளின் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகள் அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்புடன் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை யாசகம் கேட்கும் பணியிலோ அல்லது வேறு பணிகளிலோ ஈடுபடுத்தினால், சம்பந்தப்பட்டவர்கள் மீது தொழிலாளர் மற்றும் காவல்துறை மூலம் அபராதம் மற்றும் சிறைத்தண்டனை உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.



