நாகர்கோவில், செப். 24 –
அஞ்சுகிராமம் அருகே உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த 15 மாத ஆண் குழந்தையை சித்திரவதை செய்து கொலை செய்த கள்ளக்காதலன் மற்றும் தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட் தீர்ப்பளித்தது.
தூத்தூர் இரயுமன்துறை பகுதியை சேர்ந்தவர் பிரபுஷா ( 23). திருமணமான இவருக்கு 2 மகன்கள் உண்டு. பிரபுஷா வீட்டின் அருகே ஓட்டல் நடத்தி வந்த காஞ்சாம்புறத்தைச் சேர்ந்த சதாம் உசைன் (32) என்பவருக்கும், பிரபுஷாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. சதாம் உசைன் ஏற்கனவே மனைவி மற்றும் குழந்தைகளைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். இவர்களது பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இதை பிரபுஷாவின் கணவர் கண்டித்தார். ஆனால் பிரபுஷா மற்றும் சதாம் உசைன் இருவரும் தங்கள் கள்ளத் தொடர்பை கைவிடவில்லை. இதனால் பிரபுஷாவை அவருடைய கணவர் பிரிந்து முதல் குழந்தையை தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டார். இளைய மகனான பிறந்து 15 மாதங்களே ஆன அரிஸ்டோ பியூலஸ் என்ற குழந்தை பிரபுஷாவுடன் இருந்தான்.
பின்னர் கள்ளக்காதல் ஜோடியானது குஜராத், தூத்துக்குடி போன்ற இடங்களுக்குச் சென்று உல்லாசமாக இருந்தது. கடந்த 14-11-2023 அன்று மயிலாடியில் உள்ள கோழிப் பண்ணையில் 2 பேரும் வேலைக்குச் சேர்ந்தனர். அப்போது தாங்கள் இருவரும் கணவன்-மனைவி என்றும் குழந்தை தங்களது குழந்தை என்றும் கூறியுள்ளனர். அங்கு 2 நாட்கள் தங்கி வேலை செய்தனர்.
அப்போதும் சதாம் உசைனும், பிரபுஷாவும் உல்லாசமாக இருந்தபோது குழந்தை அழுது தொந்தரவு செய்ததால் அரிஸ்டோ பியூலசை கம்பால் சதாம் உசைன் பலமுறை தாக்கியுள்ளார். அதோடு மட்டும் இல்லாமல் அடுத்தடுத்த நாட்களில் குழந்தையை மிகவும் கொடுமைப்படுத்தியுள்ளனர். குழந்தையை தூங்க வைப்பதற்கு மதுபானம் கொடுத்துள்ளனர்.
மேலும் சிகரெட்டால் குழந்தையின் உடம்பில் சூடு வைத்துள்ளனர். மேலும் ஆத்திரம் தீராத சதாம் உசைன் குழந்தையை தூக்கி தரையில் வீசியுள்ளான். மேலும் குழந்தையின் வாயில் சோறை தினித்து கரண்டியால் குத்தியுள்ளார். அதிலும் ஆத்திரம் தீராத சதாம் உசேன் பலமுறை தரையில் வீசி எறிந்ததால் குழந்தைக்கு விலா எலும்பு முறிந்துள்ளது. இந்தக் கோரச் சம்பவம் குழந்தையின் தாயான பிரபுஷா கண்முன்னே அரங்கேறியது. எனினும் அவர் கண்டுகொள்ளாமல் அதற்கு உடந்தையாக இருந்துள்ளார். பின்னர் குழந்தை மயக்க நிலை அடைந்ததால் கோட்டாரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு 16-11-2023 அன்று இரவு 11 மணிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து அஞ்சுகிராமம் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை மாவட்ட செசன்சு கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன் குற்றம் சாட்டப்பட்ட சதாம் உசேன் மற்றும் பிரபுஷாவுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு தரப்பில்வக்கீல் லீனஸ்ராஜ் ஆஜரானார்.



