தென் தாமரைகுளம், ஆக. 30 –
சாமிதோப்பு அய்யா வைகுண்டசுவாமி தலைமை பதியில் ஆவணி திருவிழா கடந்த 22-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. தினமும் காலை, மாலை பணிவிடையும், மதியம் உச்சிப்படிப்பும், இரவு வாகன பவனியும் தொடர்ந்து அன்னதர்மமும் நடைபெற்று வருகிறது.
விழாவின் எட்டாம் நாளான நேற்று 29-ம் தேதி வெள்ளிக்கிழமை கலிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி மாலை 4 மணிக்கு பழங்கள் மற்றும் மலர்கள் அலங்காரத்துடன் அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை நடந்தது. 4.30 மணிக்கு அய்யா வைகுண்ட சுவாமி குதிரை வாகனத்தில் கலிவேட்டைக்கு புறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமைப்பதி முன்பிருந்து புறப்பட்ட வெள்ளை குதிரை வாகனம் நான்கு ரத வீதிகளை சுற்றி வந்து முத்திரி கிணற்றங்கரையை அடைந்தது. அங்கு அய்யா கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அய்யாவழி பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் குதிரை வாகனம் செட்டிவிளை, சாஸ்தான் கோவில்விளை, கோட்டையடி புதூர், சோட்டப்பணிக்கன் தேரிவிளை, காமராஜபுரம் வழியாக சுற்றி இரவு 11 மணிக்கு வாகனம் சாமிதோப்பு தலைமை பதியை வந்தடைந்தது. வாகனம் வரும் வழிகளில் அப்பகுதி மக்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்து வெற்றிலை, பாக்கு, பழங்கள், பன்னீர் ஆகியவற்றை சுருளாக படைத்து வழிபட்டனர். பின்னர் தலைமை பதி வடக்கு வாசலில் பக்தர்களுக்கு தவக்கோலத்தில் அய்யா வைகுண்ட சுவாமி காட்சியளித்தார். தொடர்ந்து அய்யாவுக்கு பணிவிடையும், பெரிய யுகப்படிப்பும், அன்ன தர்மமும் நடந்தது.
இன்று (சனிக்கிழமை) இரவு அனுமன் வாகன பவனியும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு இந்திர வாகன பவனியும் நடைபெறுகிறது. 1-ம் தேதி (திங்கட்கிழமை) பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. இரவு 12 மணிக்கு அய்யா காளை வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி, தொடர்ந்து திருக்கொடி இறக்கமும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை குருமார்கள் பையன் ராஜா, பால் பையன், பையன் காமராஜ், பையன், பையன் ஸ்ரீராம், பையன் சிவராஜ், பையன் பொன்ராஜ், ஸ்ரீராம பையன் ஆகியோர் செய்து வருகின்றனர்.



