மதுரை, செப். 29 –
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பில் சர்வதேச குழந்தைப்பருவ புற்றுநோய் விழிப்புணர்வு மாத அனுசரிப்பின் ஒரு பகுதியாக மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் மூலம் வெற்றி ஓட்ட மாரத்தான் நிகழ்வு நடைபெற்றது. இதில் குழந்தைப்பருவ புற்றுநோய் பாதிப்பிலிருந்து சிகிச்சையினால் வெற்றிகரமாக விடுபட்டு உயிர்வாழும் சிறார்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உட்பட 500-க்கும் மேற்பட்ட நபர்கள் இதில் பங்கேற்றது புற்றுநோயை வெல்ல முடியும் மற்றும் அதன் கடுமையான பாதிப்பிலிருந்து மீண்டு துடிப்பான வாழ்க்கையை வாழ முடியும் என்ற மனஉறுதியையும், நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்தது.
இந்த நிகழ்வானது எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் தொடங்கி மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நிறைவடைந்தது. இந்த மாரத்தான் ஓட்டத்தில் S.R. டிரஸ்டின் செயலாளர் மற்றும் அறங்காவலர் C. காமினி குருசங்கர், மருத்துவமனையின் நிர்வாக அதிகாரி டாக்டர் B. கண்ணன் மற்றும் குழந்தைகளுக்கான இரத்தப் புற்றுநோயியல் துறைத்தலைவர் மற்றும் முதுநிலை நிபுணரான டாக்டர் காசி விஸ்வநாதன் ஆகியோர் உட்பட குழந்தைகளுக்கான புற்றுநோயியல் துறை நிபுணர்களான டாக்டர் அன்னபூரணி, டாக்டர் அனிதா மற்றும் டாக்டர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் இதில் பங்கேற்று சிறப்பித்தனர்.



