நாகர்கோவில், ஏப். 13 –
கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா தனது செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் 23.04.2026 அன்று நடைபெற உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பட்டியல் 09.04.2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து 6 சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர், சமூக ஊடகவியலாளர்களின் செயல்பாடுகள், சமூக ஊடக கணக்குகளான டிவிட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்டவைகளை மாவட்ட ஆட்சியர் அலுவலக தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் செயல்பட்டு வரும் சமூக ஊடக கண்காணிப்பு குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனவே சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் தகவல்கள் உண்மையாக இருக்கும் நிகழ்வில் மட்டும் பகிரப்பட வேண்டும்.
மேலும் இந்திய தேர்தல் ஆணையத்தினால் வெறுப்புப் பேச்சு, தவறான தகவல், போலிச் செய்திகள் வெளியிடுபவர்களின் மீது மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். கருத்துக் கணிப்புகள், தேர்தல் முடிவுகளைப் பரப்புவதையும் தடை செய்கிறது.
மத உணர்வுகளைப் புண்படுத்தி சாதி, சமூகம் அல்லது மொழி ஆகியவற்றின் அடிப்படையில் இந்திய குடிமக்களின் வெவ்வேறு வகுப்பினரிடையே பகைமை அல்லது வெறுப்பு உணர்வுகளை ஊக்குவித்தல் அல்லது ஊக்குவிக்க முயற்சித்தல் ஆகியவற்றை மேற்கொள்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளார்.



