நாகர்கோவில், ஆக. 4 –
தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் குறித்து பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பெண்களை இழிவு படுத்தும் வகையில் பேசிய உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க கோரி பல்வேறு பெண்கள் அமைப்பினர் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
இந்த நிலையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இன்று கைது செய்யப்பட்டார். அவரது மீது 9 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து கன்னியாகுமரி மாவட்ட திமுகவினர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர்.
நாகர்கோவிலில் திமுக மாவட்ட மாவட்ட அலுவலகத்தில் தொண்டர்கள் திரண்டனர். பின்னர் காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து வடசேரி சந்திப்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மகேஷ் துவக்கி வைத்து பேசினார்.
அவர் பேசுகையில்: விவசாயிகளின் உரிமைக்காகவும் காவிரி நீருக்காகவும் தஞ்சையில் அறவழியில் போராடிய எதிர்கட்சித் தலைவரின் குரலை நசுக்க நினைக்கும் அரசின் அடக்குமுறைக்கு திமுக ஒருபோதும் அஞ்சாது. மேலும் இந்த கைது நடவடிக்கை முற்றிலும் அரசியல் பழிவாங்கும் செயல். காவல்துறையின் ஒருதலைபட்சமான போக்கை கடுமையாக கண்டிப்பதாகவும் கூறினார். பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தொண்டர்கள் உதயநிதி ஸ்டாலின் கைதை உடனடியாக வாபஸ் பெற வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் திமுக மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு மற்றும் பொது குழு உறுப்பினர்கள், நகர ஒன்றிய பகுதி செயலாளர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
உதயநிதி ஸ்டாலின் கைதை தொடர்ந்து நாகர்கோவில் பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க திமுக அலுவலகம் மற்றும் நகரின் முக்கிய சந்திப்பு பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த அவசரப் போராட்டத்தால் நாகர்கோவில் பகுதியில் பரபரப்பு நிலவியது.



