களியக்காவிளை, ஜூன் 15 –
குமரி – கேரளா எல்லை பகுதியான பாறசாலை அருகே கொற்றாமம் என்ற பகுதியில் திருவனந்தபுரம் பகுதியில் இருந்து களியக்காவிளை நோக்கி சென்ற குமரி மாவட்டம் குலசேகரம் பகுதியை சேர்ந்தவர்கள் பயணித்த சொகுசு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த ஆட்டோவில் மோதியது. பின் அதே வேகத்தில் கேரளா அரசு பேருந்து மீது மோதி ஏற்பட்ட கோர விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொது மக்கள் மீட்டு பல்வேறு மருத்துவமனைகளில் கொண்டு சென்றனர். காரில் வந்தவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த குலசேகரம் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. கார் மற்றும் ஆட்டோ முன்பகுதி முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளது இந்த விபத்து தேசிய நெடுஞ்சாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரில் பயணித்த குலசேகரம் பகுதியை சேர்ந்த வினு (39), ஆன்லியா (10), ஆன்லின் (9) ஆகியோர் திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர், ஆட்டோ ஓட்டுநர் தங்கராஜன் (70) மற்றும் அரசு பேருந்தில் இருந்த அஞ்சனா (27) பாறசாலை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மற்றவர்கள் நெய்யாற்றின்கரை மருத்துவமனையிலும் சிகிட்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து பாறசாலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



