திருப்பூர், ஜூன் 14 –
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் முன்னாள் நடிகர் சங்கத் தலைவர் முன்னாள் தமிழக எதிர்க்கட்சித் தலைவராக இருந்த திரு. கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தவப்புதல்வன் சண்முகப் பாண்டியன் நடித்து வெளிவந்த படைத் தலைவன் திரைப்படம் தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட திரையரங்கில் வெளியிடப்பட்டது. அதன் ஒரு பகுதியாகத் திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சக்தி திரையரங்கில் வெளியிடப்பட்டது. திரைப்படம் காண்பதற்கு முன்பாகத் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் விசைத்தறி குழந்தை வேல் அறிவுறுத்தலின்படி மாவட்ட தேமுதிகவினர் குஜராத் மாநிலத்தில் விமான விபத்தில் உயிரிழந்த பயணிகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். மேலும் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்பு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கிய தேமுதிக நிர்வாகிகள் பின்பு படைத்தலைவன் திரைப்படத்தைப் பார்த்து மகிழ்ந்தனர். மேலும் இத்திரைப்படம் மூடநம்பிக்கையில் மூழ்கிக் கிடக்கும் மக்களுக்கு விழிப்புணர்வு திரைப்படமாக அமைந்ததாகப் பெருமையோடு தெரிவித்தனர். இதில் பகுதி கழகச் செயலாளர்கள் உதயா பிரபு, சண்முகராஜா, ஆனந்தன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் கருப்புசாமி, மாவட்ட கேப்டன் மன்ற துணைச் செயலாளர் முத்துக்குமார பாண்டி, ரத்தினம், திருமதி ஷர்மிளா பாரதி மற்றும் தேமுதிக மாநகர் மாவட்டப் பகுதி வார்டு நிர்வாகிகள் பெருந்திரளாக இந்த திரைப்படத்தைக் காண வந்திருந்தனர்.