மயிலாடுதுறை, ஆகஸ்ட் 14 –
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் இன்று நாடு முழுவதும் திரையிடப்பட்டது. நடிகர் ரஜினிகாந்தின் 50-வது ஆண்டு பொன்விழா படமான கூலி திரைப்படம் வெளியானதை தொடர்ந்து அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மயிலாடுதுறையில் மூன்று திரையரங்குகளில் கூலி திரைப்படம் வெளியாகி உள்ளது.
இதனை கொண்டாடும் விதமாக ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன் தலைமையில் நகர செயலாளர் பவுன் முருகானந்தம் உள்ளிட்ட ரசிகர் மன்ற சார்பில் கூலி திரைப்படம் வெற்றிபெற வேண்டியும் ரஜினிகாந்த் பூரண ஆயுளுடன் நலமுடன் வாழ வேண்டியும் அவரது ரசிகர்கள் மயிலாடுதுறை பிரசன்ன மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாட்டில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து விஜயா திரையரங்கு வாசலில் கூலித் தொழிலாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் 50 பேருக்கு உடைகள் உணவுகள் மற்றும் ரொக்க பணம் ஆகியவை அடங்கிய நலத்திட்ட உதவிகளை ரஜினி ரசிகர்கள் வழங்கினர். தொடர்ந்து திரையரங்கு வாசலில் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு ஊர்வலமாக திரைப்படம் காண சென்றனர். இந்நிலையில் இரண்டு கால்கள் செயலிழந்த மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவர் தவழ்ந்த படி முதல் காட்சி காண தியேட்டருக்குள் சென்றது ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.



