ஈரோடு. செப்.02.
ஈரோடு சக்தி மசாலா நிறுவனத்தின் ஒரு அங்கமான சக்திதேவி அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்டு வரும் சக்தி சிறப்புப்பள்ளி மற்றும் மறுவாழ்வு மையத்தில் பயிற்சி பெற்று வரும் சுமார் 100 சிறப்பு குழந்தைகளுக்காக சிறப்பு இன்பச்சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது. குழந்தைகளின் மனமகிழ்ச்சியை மேம்படுத்தவும், புதிய இடங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தவும், அவர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும் இந்த சுற்றுலா நடத்தப்பட்டது.
இதையடுத்து, பெருந்துறை அருகே அமைந்துள்ள “சில்-அவுட்” தீம்பார்க்கிற்கு குழந்தைகள் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு பல்வேறு விளையாட்டுகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் குழந்தைகள் ஆர்வத்துடன் பங்கேற்று மகிழ்ச்சியாக பொழுதைக் கழித்தனர். சக குழந்தைகளுடன் இணைந்து விளையாடியதன் மூலம் அவர்களுக்கு உற்சாகமும் புதிய அனுபவமும் கிடைத்தது.
இந்நிகழ்வில் சிறப்பு குழந்தைகளின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் உள்ளிட்ட மொத்தம் 250 பேர் கலந்து கொண்டனர். குழந்தைகளின் மகிழ்ச்சி மற்றும் வளர்ச்சியை மையமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இன்பச்சுற்றுலா, அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியான அனுபவமாக அமைந்தது.



