குளச்சல், ஜூலை 3 –
திங்கள்நகர் அடுத்த நெய்யூர் பகுதியை சேர்ந்தவர் விமல் சதீஷ் மனைவி ரக்ஷனா. இந்த தம்பதியின் மகள் கல்லுக்கூட்டம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 3 ம் வகுப்பு படித்து வருகிறார். ரக்ஷனா தினமும் தனது ஸ்கூட்டரில் மகளை பள்ளிக்கு அழைத்து செல்வது வழக்கம். நேற்று மாலை ரக்ஷனா தனது ஸ்கூட்டரில் மகளை அழைத்து வர பள்ளிக்கு புறப்பட்டார்.
கல்லுக்கூட்டம் பகுதியில் உள்ள பள்ளி அருகே செல்லும்போது, பின்னால் பைக்கில் வேகமாக வந்த குளச்சல் பகுதி சேர்ந்த ராம் பிரஜித் என்பவர் ஸ்கூட்டர் மீது மோதினார். இந்த விபத்தில் ரக்ஷனா படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் மீட்டு நாகர்கோவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் பைக்கை ஓட்டி வந்த ராம் பிரஜித் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது போன்று குளச்சல் ஆசாத் நகரை சேர்ந்த தௌபீக் (45) என்பவர் கப்பலில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது காரில் குளச்சல் அண்ணா சிலை சந்திப்பில் இருந்து பள்ளி ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்குள்ள ஒரு டீக்கடையில் காரை நிறுத்தி டீ குடித்துக் கொண்டு இருந்தார். அந்த நேரம் அந்த வழியாக வந்த காணிக்கை மாதா தெருவை சேர்ந்த ராகுல் (25) என்ற மீன்பிடி தொழிலாளி ஒட்டி வந்த பைக் தெளபீக் காரில் மோதியது.
இந்த விபத்தில் ராகுல் படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த ராகுல் நாகர்கோவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தெளபீக் அளித்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் ராகுல் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


