குளச்சல், செப். 24 –
குளச்சல் அருகே உள்ள மீனவ கிராமத்தில் தாயை இழந்த இரண்டு சிறுமிகள் அவர்கள் பாட்டியின் பராமரிப்பில் வாழ்ந்து வருகின்றனர். இதில் 11 வயதான சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறாள். பாட்டி தினமும் காலையில் சுமார் 5 மணிக்கு மீன் வியாபாரத்துக்கு சென்று விட்டு 7 மணிக்கு வருவது வழக்கம். அதன்படி சம்பவ தினம் காலை 5 மணிக்கு பாட்டி மீன் வியாபாரத்துக்கு சென்றார். அப்போது சிறுமிகளில் ஒருவர் பாட்டிக்கு போன் செய்து உடனே வீட்டுக்கு வருமாறு கூறினார். இதனை அடுத்து பாட்டி பதறி அடித்து கொண்டு வீட்டிற்கு சென்றார். அப்போது பக்கத்து வீட்டை சார்ந்த மீன்பிடித் தொழிலாளி டார்ஜன் என்பவர் அங்கு இருந்தார்.
இதையடுத்து 11 வயது சிறுமியிடம் பாட்டி கேட்டபோது நாங்கள் படுத்திருந்த போது டார்ஜன் வீட்டுக்கு வந்து தனக்கு பாலியல் சில்மிஷம் செய்ததாக கூறினார். இதை கேட்ட அதிர்ச்சி அடைந்த பாட்டி டார்ஜனிடம் கேட்டபோது அவர் ஆத்திரமடைந்து பாட்டியை கையில் வைத்திருந்த செல்போனை பிடுங்கி வீசி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து பாட்டி குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்த டார்ஜனை போக்சோ பிரிவில் வழக்குப் பதித்து அவரை கைது செய்தனர்.


