தென்காசி, ஜூலை 28 –
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் மாநிலத் தலைவர் எழிலரசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆசிரியர்களின் நலன் சார்ந்த பல்வேறு முக்கியக் கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக ஆசிரியர்களின் பங்களிப்பு இல்லாத பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைந்து மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்கிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அகில இந்தியச் செயலாளர் அண்ணாமலை நீட் தேர்வு வினாத்தாள் கசிவு என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதைக் கண்டித்து பல போராட்டங்கள் நடைபெற்றும் இன்னும் முறையான தீர்வு கிடைக்கவில்லை. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க மறுத்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலகச் செய்தது இளைஞர்களின் தொடர் போராட்டமே ஆகும். அந்த வகையில் தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து முழுமையான விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதில் தமிழக ஆசிரியர் கூட்டணி உறுதியாக உள்ளது என்று தெரிவித்தார்.
கடந்த காலத்தில் ஆட்சி செய்தவர்கள் அரசு ஊழியர்களின் நம்பிக்கையை முற்றிலும் இழந்துவிட்டனர். அவர்கள் அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை இனி அவர்களைப் பற்றிப் பேசி எந்தப் பலனும் இல்லை. ஊழலுக்கு எதிரான அரசு எனத் தமிழக முதல்வர் கூறுவது போலவே தற்போதைய பள்ளிக் கல்வித்துறையும் நேர்மையாகச் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆட்சிக் காலத்தில் ஆசிரியர்களுக்கான நிர்வாக மாறுதல் (Transfer) என்பது பெரிய வியாபாரமாக இருந்தது. ஆனால் தற்போதைய ஆட்சியில் அந்த நிலை மாறி வெளிப்படைத்தன்மை நிலவுகிறது எனக் கூறினார். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.



