நாகர்கோவில், நவ. 4 –
கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவுத்துறை நிர்வாகம் முறையாக விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன்களை உடனடியாக வழங்கவும், உரங்களை விநியோகிக்கும் நிறுவனங்களிடமிருந்து உரங்களை முறையாக பெற்று விவசாயிகளுக்கு வழங்கி கும்பப்பூ சாகுபடி முறையாக நடைபெற கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் அரசை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கன்னியாகுமரி மாவட்டத்தில் 113 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. இச்சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் வட்டியில்லாத கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கடன் தொகையில் 10 சதவீதம் பிடித்தம் செய்து விவசாயிகளுக்கு உரங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இதனை பயன்படுத்தி விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர்.
ஆனால் தற்போது நடப்பாண்டில் கடந்த மூன்று மாதங்களாக 50-க்கும் மேற்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் ரசாயன உரங்களை விநியோகிக்கும் நிறுவனங்களிடமிருந்து முறையாக உரங்களை பெற்று கூட்டுறவு துறையினர் விநியோகம் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு கூட்டுறவு கடன் சங்கங்களில் வழங்கப்படும் கடன் தொகையினை வழங்குவதிலும், விவசாயிகளுக்கு உரங்கள் வழங்குவதிலும் இழுபறி நிலை தொடர்வதால் விவசாயிகள் விவசாய பணிகளை தொடர முடியாத நிலையில் இருந்து வருகிறார்கள்.
எனவே, கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவுத்துறை நிர்வாகம் முறையாக விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன்களை உடனடியாக வழங்கவும், உரங்களை விநியோகிக்கும் நிறுவனங்களிடமிருந்து உரங்களை முறையாக பெற்று விவசாயிகளுக்கு வழங்கி விவசாயிகள் நலன் காத்திட வேண்டுமென அறிக்கையில் கூறியுள்ளார்.



