நாகர்கோவில், பிப். 17 –
கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் முனைவர் அ.அன்பு வழிகாட்டுதலின்படி உதவி வன பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குநர் ஸ்ரீ வல்சன் தலைமையில் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 இடங்களில் நேச்சர் பவுண்டேஷன் வினோத் மற்றும் பூதப்பாண்டி வனச்சரக அலுவலர் அன்பழகன், இளம் ஆய்வாளர் சிவகுமார் உட்பட 75 தன்னார்வலர்கள் மற்றும் பறவை ஆய்வாளர்கள் உடன் 55 வனப் பணியாளர்கள் மொத்தம் 130 பேர் குழுக்களாக 2026 ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி மேற்கொண்டனர்.
இந்த கணக்கெடுப்பில் பச்சைக்கிளி, மைனா, குயில், கௌதாரி, மரங்கொத்தி, செம்பருந்து, கரும்பருந்து, இருவாச்சி, பச்சை குக்குறுவான், கருஞ்சிட்டு தோட்டக்கள்ளன், செம்புவால் ஈப்பிடிப்பான், பாம்பு திண்ணி கழுகு, குயில் கீச்சான், வெண் மார்பு மீன் கொத்தி, கருந்தலை மாங்குயில், சூரை குருவி, சின்ன இரவாடி, கள்ளப் பருந்து, பச்சை பஞ்சுருட்டான்,
துடுப்பு வால் கரிச்சான் போன்ற 100 ற்கும் மேற்பட்ட இனப்பறவைகள் காணப்பட்டன.
இந்த கணக்கெடுப்பில் கலந்து கொண்ட தன்னார்வலர்களுக்கு வனத்துறை சார்பாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பறவைகள் கணக்கெப்பின் முழு விவரம் ஆய்வின் முடிவில் பின்னர் தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



