நாகர்கோவில், ஜூலை 13 –
குமரி மாவட்ட காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லறவு கிரிக்கெட் போட்டி நாகர்கோவில் கோணம் அரசு தொழில்நுட்பக் கல்லூரி மைதானத்தில் கடந்த 1ம் தேதி தொடங்கி நடந்தது. குமரி மாவட்டத்தில் இருந்து மொத்தம் 26 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. நேற்று இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு மாவட்ட போலீஸ் எஸ்.பி ஸ்டாலின் பரிசு வழங்கினார். முதல் பரிசு பெற்ற அணிக்கு ரூ. 50,000 மற்றும் கோப்பையும், 2ம் பரிசு பெற்ற அணிக்கு ரூ.30,000 மற்றும் கோப்பையும், 3ம் பரிசு பெற்ற அணிக்கு ரூ 15 ஆயிரமும் கோப்பையும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் எஸ்பி ஸ்டாலின் பேசுகையில்:- குமரி மாவட்ட காவல்துறை மற்றும் பொது மக்கள் இணைந்து முதலில் கைப்பந்து தொடர் நடத்தியதில் அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து தற்பொழுது கிரிக்கெட் தொடர் நடத்தியுள்ளோம். காவல்துறை என்பது வெறும் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது மட்டும் காவல்துறை பணி அல்ல. அதையும் தாண்டி பொதுமக்களுக்கான நல் வழிகாட்டியாகவும் காவல்துறை விளங்கி வருகிறது. குமரி மாவட்டத்தில் காவல்துறையினர் கடுமையாக நடந்து கொள்கிறார் என்று எண்ணம் பொது மக்களுக்கு உள்ளது. அதை மாற்ற வேண்டும். போதை இல்லாத, விபத்து இல்லாத மாவட்டமாக குமரி மாவட்டத்தை மாற்ற இளைஞர்களின் பங்கு மிகவும் அவசியம். இளைஞர்களின் பங்களிப்பு இருந்தால் நிச்சயம் புதிய இலக்கை அடைய முடியும் என அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் கோணம் தொழில்நுட்பக் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் முனைவர் சுப்ரதீபன், குமரி மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் ஹரிஹர சுப்பிரமணியன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அருண் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



