குளச்சல், நவ. 4 –
புதுக்கடை பகுதியை சேர்ந்தவர் சுல்பிகர் (48). இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு 16 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர்கள் திருவனந்தபுரத்தில் வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தம்பதியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து சுல்பிகர் தனது மனைவி மகளைப் பிரிந்து தனியாக புதுக்கடைக்கு வந்து விட்டார்.
பின்னர் இரண்டாவது திருமணம் செய்து வசித்து வருகிறார். சுல்பிகரின் மனைவி மற்றும் மகள் திருவனந்தபுரத்தில் வசித்து வருகின்றனர். இருப்பினும் மகள் அடிக்கடி புதுக்கடை வந்து தனது தந்தையை சந்தித்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த 2023-ம் ஆண்டு ஓண விடுமுறையில் அந்த சிறுமி புதுக்கடையில் உள்ள தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சுல்பிகர் தனது மகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு திருவனந்தபுரம் சென்ற அந்த சிறுமி பயத்தில் இது குறித்து யாரிடமும் கூறவில்லை.
இந்த நிலையில் தற்போது பள்ளியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் குழந்தைகள் நல அமைப்பு சார்பில் பெண் குழந்தைகளுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது. அப்போது தனது தந்தையால் தான் சீரழிக்கப்பட்ட சம்பவம் குறித்து அந்த சிறுமி கூறியுள்ளார். இது குறித்து குழந்தைகள் நல அமைப்பு திருவனந்தபுரம் பூந்துறா காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். போலீசார் போக்சோ உள்ளிட்ட 15 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர் இந்த சம்பவம் நடந்த இடம் குமரி மாவட்டம் குளச்சல் மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி என்பதால் பூந்துற போலீசார் இந்த வழக்கை குளச்சல் மகளிர் போலீஸ்க்கு மாற்றினர். இதையடுத்து குளச்சல் மகளிர் போலீசார் சுல்பிகர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


