நாகர்கோவில், ஜூலை 10 –
இரணியல் பகுதியை சேர்ந்த பெண்களின் புகைப்படங்களை அவர்களின் சமூக வலைதள பக்கங்களில் இருந்து ஸ்கிறீன்ஷோட் எடுத்து வைத்துக்கொண்டு, அவற்றை ஏஐ தொழில் நுட்பம் மூலமாக மார்பிங் செய்து, போலி இன்ஸ்டாகிராம் ஐடியில் பதிவேற்றம் செய்து இருப்பது தெரிய வந்தது. பெண்களுக்கு களங்கம் ஏற்படுத்திய இந்த குற்ற செயலில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க, மாவட்ட எஸ்பி ஸ்டாலினிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்தக் குற்றவாளியை உடனடியாக கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவிட்டார்கள்.
சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் பார்வதி, உதவி ஆய்வாளர் அஜ்மல் ஜெனிப் ஆகியோர் தலைமையில் போலீசார், குற்றவாளியை கைது செய்யும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இக்குற்ற செயலில் ஈடுபட்டது கக்கோடு பகுதியை சேர்ந்த சுபாஷ் என்பவரின் மகன் தனுஷ் (22) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறப்பாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த சைபர் கிரைம் போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.



