செங்கல்பட்டு, ஆகஸ்ட் 6 –
தமிழ்நாடு காவல்துறையினருக்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் உள்ள கமாண்டோ பயிற்சி பள்ளி மையத்தில் கடந்த 24.07.2025 முதல் 26.07.2025 ஆகிய நாட்கள் நடைபெற்றது. இதில் ரைஃபில் (RIFILE), ரிவால்வர் (REVOLVER), கார்பைன் (CARBINE) ஆகிய பிரிவுகளின் கீழ் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் பல்வேறு மண்டலங்களாக காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
இதில் தென்மண்டல காவல்துறை சார்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அவர்களின் தலைமையில் தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், இராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 31 காவல்துறையினர் கலந்துகொண்டு ஒட்டு மொத்த துப்பாக்கி சுடுதல் ஆண்கள் பிரிவில் தென்மண்டல காவல்துறையினர் முதலிடத்தை பிடித்து 4 தங்க பதக்கங்கள், 2 வெள்ளி பதக்கங்கள் மற்றும் 2 வெண்கல பதக்கங்களை பெற்றும் மேலும் பெண்கள் பிரிவில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களை பெற்றுள்ளனர்.
மேற்படி பதக்கங்களை பெற்ற காவல்துறையினரை நேற்று (05.08.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட ஜான் அவர்கள் பாராட்டி மென்மேலும் பதக்கங்கள் பெற வாழ்த்தினார்.