திருச்சி, ஜூலை 31 –
திருச்சி, கருமண்டபத்தை சார்ந்தவர் மனோகர். இவரிடம் திருச்சி மாநகர காவல்துறையில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவில் தலைமை காவலராக பணியாற்றும் ரவி என்பவர் கடந்த 2022ம் ஆண்டு கடனாக ரூபாய் 5 இலட்சம் வாங்கியிருந்தார். மேற்படி கடன் தொகையை திருப்பி தரும்பொருட்டு காசோலை ஒன்றை மனோகரிடம் கொடுத்துள்ளார். ஆனால், மேற்படி காசோலை பணமில்லாமல் திரும்பியுள்ளது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மனோகர் திருச்சிராப்பள்ளி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் -3ல் ரவிக்கு எதிராக காசோலை மோசடி வழக்கை தாக்கல் செய்தார்.
இதனிடையே மேற்படி வழக்கிற்கான தீர்ப்பு நேற்று 30.07.2026ந் தேதி நீதிபதி முகமது சுகைல் என்பவரால் வழங்கப்பட்டது. அதன்படி, மேற்படி காசோலை மோசடி வழக்கில் எதிரி ரவி குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டு, தலைமைக் காவலர் ரவிக்கு ஓராண்டு கால சிறை தண்டனையும், புகார்தாரருக்கு கொடுக்க வேண்டிய காசோலை தொகையை அபராதமாக விதித்தும் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளார். மேலும் மேற்படி காசோலை தொகையை ரவி கொடுக்காத பட்சத்தில் கூடுதலாக இரண்டு மாத சிறை தண்டனை அனுபவிக்கும்படியும், எதிரி பிணையில் வெளிவர முடியாத பிடியாணையையும் பிறப்புத்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.
இந்த தீர்ப்பால் திருச்சி மாநகர காவல்துறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மேற்படி எதிரி ரவி திருச்சி காவல் சரகங்களில் பல்வேறு உயர் அதிகாரிகளுடன் பணியாற்றியவர் என்பதும், மேற்படி வழக்கில் புகார்தாரருக்கு ஆதரவாக வழக்கறிஞர் எஸ்.ஆர்.கிஷோர்குமார் ஆஜரானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



