களியக்காவிளை, ஜூலை 8 –
கன்னியாகுமரி மாவட்ட பேரூராட்சிகள் துறை சார்பில் களியக்காவிளை பேருந்துநிலைய கட்டுமான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் இன்று 8ம் தேதி ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் தெரிவிக்கையில்: களியக்காவிளையை சுற்றி உள்ள பொதுமக்கள், பயணிகள், வியாபாரிகள் உள்ளிட்டோர்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் களியக்காவிளை பிரதான சந்திப்பில் களியக்காவிளை தேர்வு நிலை பேரூராட்சியின் சார்பில் ரூ.9.20 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான பணிகள் கடந்த 2024 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பேருந்து நிலையத்தில் தரைத்தளத்தில் 4 கடைகளும், முதல்தளத்தில் 4 கடைகளும், இரண்டாம் தளத்தில் 3 கடைகள் மற்றும் உணவகமும் கட்டப்பட்டு வருகிறது. மேலும் அலுவலகங்கள், ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக கழிப்பறைகள், கை கழுவும் இடம், சுகாதார பொருட்கள் வைக்கும் அறை, குடிநீர் வசதிகள் என அடிப்படை வசதிகளுடன் பேருந்துநிலையம் கட்டப்பட்டு வருகிறது.
மேலும் இப்பேருந்து நிலையத்தில் 150 க்கும் மேற்பட்ட பேருந்துகள் தினமும் வந்து சென்று கொண்டிருந்தது. அதற்கு ஏற்ப கூடுதல் வசதிகளுடன் வடிவமைத்திட ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. குறிப்பாக பணிகளை நவம்பர் மாதத்திற்குள் அனைத்து பணிகளையும் முடித்திட அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து பளுகல் பேரூராட்சிக்குட்பட்ட பளுகல் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ.75 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கூறினார்.
நடைபெற்ற ஆய்வில் உதவி இயக்குநர் பேரூராட்சிகள் கோமதி, களியக்காவிளை பேரூராட்சி தலைவர் சுரேஷ், உதவி செயற் பொறியாளர் சிவசங்கர், செயல் அலுவலர்சந்திரகலா, துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



