களியக்காவிளை, ஏப். 1 –
தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு எல்லைப்பகுதி வழியாக ரேஷன் அரிசி மற்றும் மானிய மண்ணெண்ணெய் கடத்துவது தொடர் கதையாக நடந்து வருகிறது. மேலும் தற்போது சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தமிழக – கேரள பகுதியான களியக்காவிளை சோதனை சாவடியில் போலீசார் வாகனங்களை எல்லை தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை சப்-இன்ஸ்பெக்டர் சுஜின் தலைமையில் போலீசார் களியக்காவிளை சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும் படி ஒரு கார் வந்து கொண்டிருந்தது. அந்த காரை நிறுத்துமாறு போலீசார் சைகை காட்டினர். ஆனால் அந்த கார் டிரைவர் போலீசாரை பார்த்ததும் சாலையில் காரை நிறுத்தி விட்டு தப்பியோடிவிட்டார்.
சந்தேகமடைந்த போலீசார் காரை சோதனை செய்து பார்த்தபோது காரில் 2 டன் ரேசன் அரிசி இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இதனை பறிமுதல் செய்தனர். ரேசன் அரிசியை கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து காரை பறிமுதல் செய்த போலீசார் கடத்தல் காரையும், ரேசன் அரிசியையும் உணவு கடத்தல் தடுப்பு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் கடத்தல் அரிசியை காப்பிக்காடு அரசு நுகர்வோர் வணிப கிடங்கிலும் வாகனத்தை தாலுகா அலுவலகத்திலும் ஒப்படைத்தனர்.



