கருங்கல், ஜூன் 18 –
கருங்கல் தேர்வு நிலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2024-25- ன் கீழ் கருங்கல் பேருந்து நிலையம் மேம்பாடு செய்ய ரூ.5.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் நேற்று கருங்கல் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, கிள்ளியூர் எம்.எல்.ஏ ராஜேஷ்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும் கருங்கல் பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பணிகள் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டது. நடைபெற்ற ஆய்வின்போது பேரூராட்சிகள் உதவி இயக்குநர் இராமலிங்கம், கருங்கல் பேரூராட்சி செயல் அலுவலர் சத்யதாஸ், கிள்ளியூர் தாசில்தார் ராஜசேகர், குளச்சல் துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், நெடுஞ்சாலை துறை உதவி செயற்பொறியாளர், துறை அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட கலந்து கொண்டனர்.