கருங்கல், ஜூன் 13 –
கருங்கல் அருகே மார்த்தாண்டம் செல்லும் சாலையில் எட்டணி என்ற சந்திப்புப் பகுதி உள்ளது. இந்த சந்திப்பில் 25 ஆண்டுகளுக்கு மேலாக மீன் மார்க்கெட் இயங்கி வருகிறது. சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஏராளம் மக்கள் இந்த மீன் மார்க்கெட்டைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த தனி நபர் ஒருவர் சுகாதாரக் கேடு ஏற்படுவதாகவும், விபத்து உள்ளிட்ட சம்பவங்கள் நடப்பதாகவும், அதனால் மீன் மார்க்கெட் அகற்ற வேண்டும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்குப் புகார் மனு அளித்தார். அதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் அதிகாரிகள் மார்கெட்டை அகற்ற முடிவு செய்து போலீஸ் பாதுகாப்பு கேட்டனர். இதனால் குளச்சல் ஏஎஸ்பி தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். சம்பவம் அறிந்ததும் ஏராளம் பொதுமக்கள் அங்கு குவிந்தனர். மீன் மார்க்கெட் அகற்றக் கூடாது என போஸ்டர்களை ஒட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே பொதுமக்களுக்கு ஆதரவாக திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் மீன் மார்க்கெட் அகற்றாமல் திரும்பி சென்றனர்.